
மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் T20 கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் அங்குரார்ப்பண நிகழ்வு கோட்டைமுனை விளையாட்டு கிராம புற்தரை மைதானத்தில் 01.04.2024 அன்று இடம்பெற்றது. இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் மற்றும் அம்பாறை மாவட்ட மேஜர் ஜனரால் விபுலசந்திரஶ்ரீ உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் T20 சுற்றுப் போட்டியானது நாட்டில் தெரிவு செய்யப்பட்ட முதல் பிரிவைச் சேர்ந்த முன்னனி பாடசாலை மாணவர்களுக்கிடையிலான கண்காட்சி ரீதியான கிரிக்கெட் சுற்றுப்போட்டிகளாக இடம்பெறவுள்ளன. 19 வயதிற்குட்பட்ட வீரர்களுக்கான கிரிக்கட் சுற்றுப்போட்டியின் மூலம் உள்ளூர் கிரிக்கட் வீரர்களை மேம்படுத்தி அபிவிருத்தி செய்யும் நோக்கத்தின் ஒரு அங்கமாக இப்போட்டிகள் 01.04.2024 தொடக்கம் 07.04.2024 வரை இடம்பெறவுள்ளன.
இதன் போது கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியில் உள்ள நுட்பங்களை இப்பிரதேச வீரர்கள் கற்றுக் கொள்வதற்குமான களமாக இப்போட்டிகள் அமையவுள்ளன. வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பிரபல பாடசாலை மாணவர்கள் இப்போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 19 வயதிற்குட்பட்ட உலகக்கிண்ண சுற்றுப்போட்டியில் பங்குபற்றிய இலங்கை வீரர்களும் இப்போட்டியில் கலந்துகொள்ளவுள்ளமை சிறப்பம்சமாகும்.
கோட்டைமுனை விளையாட்டுக் கழகதத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு முதல் தடவையாக பிரித்தானியாவின் கிரிக்கெட் தரம் இரண்டினை நிறைவு செய்த பயிற்றுவிப்பாளர் மலிந்த சுரபுலிக்கே வீரர்களுக்கு பயிற்சி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஶ்ரீகாந், 231 கட்டளை தளபதி பிரிகேடியர் சந்திர குமாரஶ்ரீ, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ. சுகுணன், பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் மற்றும் உயர் அதிகாரிகள், விளையாட்டுக் கழக பணிப்பாளர்கள், கழக உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.







