
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவ சந்திரகாந்தனின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற மணல் வீதிகளை கிறவல் வீதிகளாக மாற்றும் வேலைத்திட்டத்தினை மீளாய்வு செய்வதற்கான கலந்துரையாடல் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 26.10.2023 அன்று இடம் பெற்றது. இந் நிகழ்வில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சின் மேலதிக செயலாளர் பி.ரணவிர கலந்துகொண்டார். "மணல் வீதிகள் அற்ற கிராமங்கள்" எனும் தொணிப்பொருளில் மாவட்டத்தில் பல வீதிகள் புணரமைக்கப்பட்டு வருகின்றது. இதன் போது பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆர். ஜதிஸ்குமார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வீதிகள் தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு அளிக்கை செய்தார்.
இதன் போது அதிகாரிகளினால் ஏறாவூர் பற்று, கோறளைப்பற்று தெற்கு, கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வீதிகளை அதிகாரிகள் கள விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டனர். இந் நிகழ்வில் மாகாண பணிப்பாளர் எந்திரி கே. சிவகுமார், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதம எந்திரி பி.பரதன், கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர். இராஜாங்க அமைச்சர் சிவ சந்திரகாந்தன் அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக மாவட்டத்தில் பல வீதிகள் புணரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.






