
மட்டக்களப்பு மாவட்ட டெங்கு ஒழிப்பு தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 02.10.2023 அன்று இடம் பெற்றது. மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணன் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்றது. இதன் போது மாவட்டத்தில் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய சாத்தியமான பல்வேறு இடங்கள் இனங்காணப்பட்டுள்ளதால் அவற்றை அழிப்பதற்கான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்கள் பல முன்வைக்கப்பட்டன.
மாவட்டத்தில் அரச திணைக்களங்கள் சிலவற்றில் டெங்கு நுளம்புகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதனால் அவற்றை கட்டுப்படுத்துவதுதற்கு சம்பந்தப்பட்ட திணைக்களங்கள், பிரதேச செயலகங்கள், உள்ளுராட்சி நிறுவனங்கள் முன்வர வேண்டும் என இங்கு வலியுறுத்தப்பட்டது.மேலும் இக் கலந்துரையாடலில் நாய்களுக்கு ஏற்படும் நீர் வேறுப்பு நோய் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதுடன் இந் நோயை கட்டுப்படுத்துவதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. மேலும் உயிரைப் பறிக்கும் இத் தொற்று நோயினை கட்டுப்படுத்தும் போது எதிர் நோக்கும் சவால்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக அதிகாரிகள் இதன் போது தெளிவுபடுத்தினர். மாவட்டத்தில் டெங்கு பரவல் மற்றும் நாய்களின் நீர் வேறுப்பு நோய் தொடர்பாக கடந்த கால தரவுகளை வைத்தியர் கார்த்திகா அளிக்கை செய்தார்.
இதன் போது கருத்து தெரிவித்த மேலதிக அரசாங்க அதிபர் அதிக டெங்கு நோய் தாக்கமுடைய பிரதேசங்களில் துரித கதியில் செயற்பட்டு இவ் நோயை கட்டுப்படுத்த அனைவரும் முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.







