
அரச பொது நிருவாக நடைமுறையினை உறுதிப்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பில் அரச உத்தியோகத்தர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுவருகின்றன. மாவட்டமேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மாவட்ட செயலக நிருவாக உத்தியோத்தர் கே.மதிவண்ணன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இப் பயிற்சிப்பட்டறை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 24.11.2023 அன்று நடைபெற்றது.
மாவட்ட செயலகம் மற்றும் 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் கடமைபுரியும் அரச உத்தியோகத்தர்களின் பெயர்வழிக் கோவை மற்றும் சம்பள மாற்றம் தொடர்பான கடமைகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கு இப்பயிற்சி நெறி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது இங்கு கடமையாற்றும் விடயத்திற்குரிய முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
இப்பயிற்சிப் பட்டறையின் வளவாளர்களாக காத்தான்குடி பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம். றஊப் மற்றும் மாவட்ட செயலக நிருவாக உத்தியோகத்தர் கே.மதிவண்ணன் ஆகியோர் பயிற்சிகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.







