
கலாசார அலுவல்கள் திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்டச் செயலகமும் இணைந்து நடாத்தும் 2023 ஆம் ஆண்டிற்கான மாவட்ட இலக்கிய விழா மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக உதவி மாவட்டச் செயலாளர் ஏ.நவேஸ்வரன் தலைமையில் 06.12.2023 அன்று மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் தமிழ் துறையின் சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி. ரூபி வலன்ரீனா பிரான்சிஸ், சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட எழுத்தாளர் சங்க தலைவரும், மகரகம தேசிய கல்வி நிறுவகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளருமான கலாநிதி முருகு தயாநிதி, கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எச்.எம்.முசாமில் உள்ளிட்டோர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.
மூவினங்களின் பாரம்பரியம், தொன்மை மற்றும் பல் மத கலாசார வெளிப்பாடுகள், விழுமியங்களை வெளிப்படுத்தும் பண்பாட்டு கலை கலாசார, இலக்கிய நிகழ்வுகள் இதன்போது அரங்கேற்றப்பட்டிருந்தது. இதன் போது இலக்கிய விழாவை முன்னிட்டு மாவட்ட ரீதியில் நடாத்தப்பட்ட போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவர்கள், கலைஞர்கள் மற்றும் கலை ஆர்வலர்கள் இதன்போது அதிதிகளினால் பாராட்டப்பட்டு நினைவுச்சின்னங்கள், பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் விழுமியங்களையும், தொன்மைகளையும், கலாசார பண்புகள் மற்றும் மட்டக்களப்பிற்கே உரித்தான கலைகள் அவற்றின்பாலெழுந்த படைப்புக்களையும் முழு உலகிற்கு அறியச் செய்வதற்கான அர்த்தமிகு நிகழ்வாக 2023 ஆம் வருடத்திற்கான மாவட்ட இலக்கிய விழா மிகச் சிறப்பாக நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. எழுத்தாளர் ரதி தனஞ்சயனின் "வாழ்தல் இனிது' எனும் சிறுகதை நூல் தொகுப்பு இதன்போது வெளியிடப்பட்டு, பிரதம அதிதி உள்ளிட்ட அதிதிகளுக்கு முதற்பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது மாவட்ட செயலக உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக கலாசார உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்கள், பாடசாலைகளின் ஆசிரியர்கள், மாணவர்கள், கலைஞர்கள், கலை ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், பெற்றோர்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டிருந்தனர்.








