
தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் 142 வருட நிறைவினை முன்னிட்டு 23.12.2023 அன்று மட்டக்களப்பில் தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் கடெற் வோக் இடம்பெற்றது. அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வழிகாட்டலில் பாதுகாப்பு அமைச்சின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் சிறப்பம்சங்களை வெளியுலகிற்கு வெளிப்படுத்தும் வண்ணம் தேசிய ரீதியில் இன்றைய தினம் கடெற் வோக் இடம்பெற்று வரும் நிலையில் மட்டக்களப்பில் 38 வது தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் கடெற் வோக் மிகச்சிறப்பாக இடம்பெற்றது.
38 வது தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் கட்டளைத் தளபதி லெப்டணன் கேணல் ஜீ.டபிள்யு.எச்.நிலந்த தலைமையில் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக ஆரம்பிக்கப்பட்ட நடை பவனியானது மட்டக்களப்பு அரசடி சந்திவரை சென்று அங்கு பாண்ட் வாத்திய அணியினர் மற்றும் மாணவர் படையணியின் அணிவகுப்பு மரியாதை என்பன இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜே.ஜே.முரளீதரன் அவர்கள் கலந்து கொண்ட நிகழ்வில், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வ.வாசுதேவன், பொலிஸ் உயர் அதிகாரிகள், கல்வி திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
குறித்த நடைபவணியில் மெதடிஸ்த மத்திய கல்லூரி, புனித மிக்கேல் கல்லூரி, மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா, வின்சன்ட் உயர்தர மகளீர் தேசிய பாடசாலை உள்ளிட்ட 6 பாடசாலைகளை சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.







