
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பதவி நிலை அதிகாரிகளுக்கு "நிலைபேறான அபிவிருத்திக்கான நோக்கங்கள்" (Sustainable Development Goals ) தொடர்பான பயிற்சி நெறி நடாத்தப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே. முரளீதரன் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 27.12.2023 அன்று இடம் பெற்றது.
நாட்டை நிலை பேறான அபிவிருத்தியை அடையச் செய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய செயல்திட்டங்கள் தொடர்பாக இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. இந்நிலைபேறான அபிவிருத்தியில் தாக்கம் செலுத்தும் காரணிகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இதன்போது ஏழ்மையை ஒழித்தல், பசி பட்டினியை நீக்குதல், உணவு பாதுகாப்பை மேற்கொள்ளல், சிறந்த கல்வி, தூய்மையான நீர் மற்றும் சுகாதாரம் என்பவற்றை கிடைக்கச் செய்தல், புதுப்பிக்கத்தக்க தூய சக்தி வளங்களில் கிடைப்பதை உறுதி செய்தல், நிலையான பொருளாதார வளர்ச்சி, நிலைபேறான நகரம் மற்றும் சமூகம், பொறுப்பு மிக்க பொருட்களுக்கான நுகர்வுகள், மீள்மரநடுகை, காலநிலை மாறுபாட்டையும் அதன் பாதிப்புகளையும் எதிர்கொள்ளக்கூடிய வகையில் நடவடிக்கை மேற்கொள்ளல், சமாதானம் நீதி, பால் நிலை சமத்துவம் போன்ற பல விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது
நிலைபேறான அபிவிருத்தி குறித்து பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.ஜதிஸ்குமார் தெளிவுபடுத்தினார். மேலும் 2024ம் வருடத்திற்கான செயலாற்றுகை குறிகாட்டி சுட்டிகளை அடையாளம் காண்பதற்கான கலந்துரையாடலும் இடம் பெற்றது.இந் நிகழ்வில் மாவட்ட செயலக பிரதம கணக்காளர் எம்.எஸ் பஸீர், உதவி பிரதேச செயலாளர்கள், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள் உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.ஐக்கிய நாடுகள் சபையினால் நிலையான அபிவிருத்தியை அடைவதற்கு (SDGs) 2016 ஆம் ஆண்டு முதல் 2030 ஆம் ஆண்டு வரையிலான பதினைந்து ஆண்டு காலத்திற்குரிய 169 குறிப்பிட்ட இலக்குகளுடன் கூடிய 17 பன்னாட்டு வளர்ச்சிக்கான குறிக்கோளை கொண்ட தீர்மானம் என்பது குறிப்பிடத்தக்கது.






