
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஊழலுக்கு எதிரான புதிய சட்டம் தொடர்பாக மாவட்ட செயலக அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தும் செயலமர்வு 28.12.2023 அன்று செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. ஜே. முரளீதரன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்ற இச்செயலமர்வில் உதவி மாவட்டச் செயலாளர் ஆ. நவேஸ்வரன் மற்றும் சமுர்த்திப் பணிப்பாளர் எஸ். புவனேந்திரன் ஆகியோர் வளவாளர்களாக செயற்பட்டனர்.
இச்செயலமர்வில் பொதுச் சேவையில் ஈடுபடும் கனிஷ்ட, சிரேஷ்ட மற்றும் பதவிநிலை வரை சகல மட்டங்களிலுமான அனைத்து அரச சேவை உத்தியோகத்தர்களும் 2023 ஆம் ஆண்டு 9 ஆம் இலக்க ஊழலுக்கு எதிரான சட்டம் புதிய சட்டம் மற்றும் அது தொடர்பாக எவ்வாறு செயற்பட வேண்டும் எனவும் அறிந்திருக்க வேண்டும் என்பதுடன் மக்களுக்கு அரசாங்கத்தின் சேவைகளை வழங்கும் போது அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்பது குறித்தும் வலியுறுத்தப்பட்டது.
இதன்போது நாட்டை சர்வதேச நாணய நிதியத்தின் ஊழலற்ற நாடுகள் பட்டியலில் உள்ளீர்க்கச் செய்வதற்கான முயற்சியாக பொதுச் சேவையை முன்னேற்றுதல், ஊழலற்ற நேர்மையான அலுவலராக செயற்பட வேண்டியதன் அவசியம், ஊழல் மற்றும் மோசடி என்றால் என்ன?, ஊழலின் வடிவங்கள், அவை தொடர்பான சட்டங்கள், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு, போன்ற விடயங்கள் தொடர்பாக தெளிவுபடுத்தப்பட்டது. இந்நிகழ்வில் கிழக்குப் பிராந்தியத்திற்கான உதவிப் பதிவாளர் நாயகம் கே. திருவருள், மாவட்ட செயலக பிரதம கணக்காளர் எம். பஸீர், மாவட்ட பொறியியலாளர் ரி. சுமன், மாவட்ட புள்ளிவிபரவியலாளர் ரி. ஜெய்தனன் உட்பட மாவட்ட செயலகத்தில் சகல பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.







