
கடந்த 21 வருடங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கி வரும் காவியா சுய அபிவிருத்தி பெண்கள் நிறுவனத்தின் 21 ஆண்டு நிறைவு நிகழ்வும், சுய உற்பத்தி பொருளின் அறிமுக நிகழ்வும் 29.12.2023 அன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. காவியா சுய அபிவிருத்தி பெண்கள் நிறுவனத்தின் பணிப்பாளர் யோகமலர் அஜித்குமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக, மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜி.ஜி.முரளிதரன் அவர்கள் கலந்து கொண்டார்.
அவுஸ்திரேலியா அம்பாள் நிறுவனத்தின் நிதி உதவியில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற குடும்பங்களில் கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள், கணவனை இழந்த பெண்கள் தலைமை தாங்கும் குடும்ப பெண்களின் வாழ்வாதாரத்திற்கான சுயதொழில் கடன் உதவி என்பன வழங்கப்பட்டன.அத்துடன் கிரீன் பெட்டி எனும் இளைஞர் யுவதிகளினால் உற்பத்தி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் அறிமுக நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது மாவட்ட அரசாங்க அதிபருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவமளிக்கப்பட்டது.
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரின் ஒருங்கிணைப்பு செயலாளர் தஜிவரன், கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் வைத்தியர் அருளானந்தம், காவியா சுய அபிவிருத்தி பெண்கள் நிறுவனத்தின் ஆலோசகரும் கட்டட நிருமான துறையின் தலைவருமான வீ.ரஞ்சிதமூர்த்தி, காவியா சுய அபிவிருத்தி பெண்கள் நிறுவனத்தின் பணியாளர்கள், பயனாளிகள், மாணவர்கள் என பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். காவியா சுய அபிவிருத்தி பெண்கள் நிறுவனமானது கணவனை இழந்த பெண்கள் தலைமை தாங்கும் குடும்ப பெண்கள், படித்துவிட்டு தொழில் வாய்ப்பை எதிர்பார்த்து இருக்கும் இளைஞர் யுவதிகளை முன்னுரிமைப்படுத்தி மாவட்டத்தில் வாழ்வாதாரம் மற்றும் மாணவர்களின் கல்விக்கான உதவி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







