
உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகத்தின் தேசிய ரீதியான பொது மக்கள் கருத்தறியும் உண்மையை கண்டறியும் குழுவினர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே முரளிதரன் அவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அசங்க குணவர்த்தன தலைமையிலான குழுவினர் செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் உண்மையை கண்டறியும் குழுவின் செயற்பாடுகள் தொடர்பாக இதன் போது விளக்கங்களை வழங்கியிருந்தனர்.
மேலும் பாமர மக்களின் கருத்துக்களை கேட்டறிதல், கடந்த காலத்தில் பெற்றுக் கொண்ட அனுபவங்களையும் சேர்த்து புதிய வரைபை வரைவது தொடர்பாகவும் இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. இன நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள், மீள்குடியேற்றம், காணிகளை விடுவித்தல், மக்களுக்கு காணி வழங்கல், பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு வழங்கல், புலம்பெயந்தவர்களினால் நாட்டை முன்னேற்று வதற்கான திட்டங்கள் போன்ற பல விடயங்கள் இத்திட்டத்தில் உள்வாங்கப்படவுள்ளதாக இதன்போது அரச உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
குறித்த கலந்துரையாடவில் உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகத்தின் உத்தியோகத்தர்கள், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்ஷினி ஸ்ரீகாந்த் உள்ளிட்ட மாவட்ட செயலக உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.







