
பருவப் பெயர்ச்சி காலநிலை தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்ரினா யுலேக்கா முரளீதரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 12.01.2024 அன்று இடம்பெற்றது. மாவட்டத்தில் பருவப் பெயர்ச்சி மழையினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பாக இதன் போது அரசாங்க அதிபரினால் அதிகாரிகளிடம் விரிவான விளக்கங்கள் கோரப்பட்டதுடன் இதுதொடர்பாக விரிவான கலந்துரையாடலிலும் ஈடுபட்டிருந்தனர்.
தாழ் நிலங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளல், நாசிவன் தீவில் உள்ள உயர்தர பரீட்சை எழுதும் பாடசாலை மாணவர்களுக்கு கடற்படையினரினால் படகு மூலம் போக்குவரத்து எற்பாடுகள் மேற்கொள்ளுதல், பட்டிருப்பு பாலம் அருகில் சல்வீனியா (ஆற்று வாழை) நிறைந்து காணப்படுவதனால் வெள்ள நீர் வடிந்தோடுவதற்கு தடையாக இருந்தமையினால் அவை அகற்றப்பட்டமை போன்ற விடயங்கள் தொடர்பாகவும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவுகள் வழங்குவது, உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக வடிகான்களை துப்பரவு செய்து வெள்ள நீரை வடிந்தோட செய்வது மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்துவித நிவாரண உதவிகளையும் உடனுக்குடன் வழங்க வேண்டுமெனவும் இதன்போது மாவட்ட அரசாங்க அதிபரினால் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த், மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் எம்.ஏ.சி எம் ரியாஸ், மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் எதிரிமான, 23 வது காலாட்படை பிரிவின் மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்தன, மட்டக்களப்பு - கல்லடி 243 வது இராணுவ படைப்பிரிவின் பிறிக்கேட் கொமாண்டர் சந்திம குமார சிங்க, கடற்படை மற்றும் விமானப்படைப்பிரிவின் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி மன்ற அதிகாரிகள் உள்ளிட்ட திணைக்களம் சார் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டிருந்ததுடன் தமது ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களையும் தெரிவித்திருந்தனர்.








