
ஏறாவூர் நகர பிரதேச செயலகம், கலாசார அதிகார சபை மற்றும் கலாசாரப் பேரவை ஆகியன இணைந்து நடாத்தும் ஏறாவூர் பிரதேச கலை இலக்கிய விழாவும் "இனசமதி" சிறப்பு மலர் வெளியீடும் ஏறாவூர் நகர் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் 23.01.2024 அன்று இடம்பெற்றது. பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜுத் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி.ஜே.ஜே.முரளிதரன் அவர்கள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளார்.
பிரதம அதிதி உள்ளிட்ட அதிதிகளுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து ஹிறாத் ஓதலுடன் கலாசார கீதம் இசைக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகியது. கலைஞர்களையும் கலைஞர்களின் படைப்புக்களையும் கௌரவிக்கும் முகமாக வருடாந்தம் நிகழ்த்தப்படும் கலை இலக்கிய விழாவில் இம் முறை ஐந்தாவது தடவையாக "இனசமதி" சிறப்பு மலர் வெளியீடு வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், இதன் முதல் பிரதி பிரதேச செயலாளரினால் மாவட்ட அரசாங்க அதிபருக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இதன் போது மாணவர்கள் மற்றும் கலைஞர்களின் கலை, கலாசார நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டதுடன், கலைஞர் கௌரவிப்பும் இடம் பெற்றது. இந்நிகழ்வில் ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சீ.அகமட் அப்கர், பிரதேச செயலகத்தின் நிருவாக உத்தியோகத்தர் திருமதி.ஜாஹிதா ஹலால்தீன், பிரதேச கலைஞர்கள், கல்வி அதிகாரிகள், பிரதேச செயலக உயரதிகாரிகள் உள்ளிட்ட மேலும் பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.







