
மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூக மட்டத்திலான இறால் வளர்ப்பு மற்றும் மீன் குஞ்சு பொரிப்பு நிலையத்தினை உருவாக்குதல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் 02.02.2024 அன்று இடம் பெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இறால் பண்ணைகளின் நிலைப்பாடு மற்றும் புதிய பண்ணைகளை அமைத்தல் தொடர்பாக ஆராயப்பட்டது.
இதன்போது வாகரை வட்டவான் பகுதியில் 125 ஏக்கர் காணியில் இறால் வளர்ப்பு இடம் பெற்று வருகின்றமையையும், மாங்கேணியிலிருந்து கட்டுமுறிவு வரை 500 ஏக்கரில் புதிதாக இறால் பண்னை அமைப்பதற்கான வேலைத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளமை, கொக்கட்டிச்சோலையிலும் மற்றுமொறு பண்னை ஆரம்பிப்பதற்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை தொடர்பான கருத்துக்கள் பரிமாறப்பட்டன. இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த் அவர்கள் மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவரின் பிரத்தியேக செயலாளர் த.தஜீவரன், மாவட்ட காணி உத்தியோகத்தர், மத்திய சுற்றாடல் அதிகார சபை, நில அளவை, விலை மதிப்பு, காணிப்பயன்பாடு, நீர்ப்பாசனம், வனவளம் ஆகிய திணைக்களங்கள், தேசிய நீர் வாழ் உயிரின வளர்ப்பு அதிகார சபை, என்பவற்றின் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.







