
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 76வது தேசிய சுதந்திர தின வைபவம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் வளாகத்தில் 04.02.2024 அன்று காலை 9.00 மணியளவில் இடம்பெற்றது. இவ்வைபவம் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளீதரன் அவர்களின் தலைமையில், மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.
இதன்போது மாவட்ட செயலாளரினால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, செயலக உத்தியோகத்தர்களால் தேசிய கீதம் இசைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.அத்துடன் அரசாங்க அதிபர் தனது தேசிய சுதந்திர தின உரையில் '' 76 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் நாம் அனைவரும் ஒற்றுமையாக ஒன்றிணைந்து நாட்டின் முன்னேற்றத்திற்காக செயற்பட வேண்டும்'' எனக் கோரிக்கை விடுத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆர். ஜதீஸ்குமார், மாவட்ட செயலக பிரதம கணக்காளர் எஸ். எம். பஷீர், உள்ளக கணக்காய்வாளர் ஆர்.காயத்ரி, நிருவாக உத்தியோகத்தர் கே. மதிவண்ணன் உட்பட செயலத்தின் பதவி நிலை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட சகல உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர். நிகழ்வின் நிறைவில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு நாட்டின் 76ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மூலிகைச் செடிகள் மாவட்ட செயலாளரினால் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.







