
கண்ணன்குடா மகா வித்தியாலய மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி கண்ணன்குடா மகா வித்தியாலயத்தின் அதிபர் ரீ. கரிகாலன் அவர்களின் தலைமையில் கண்ணன்குடா மகா வித்தியாலய மைதானத்தில் 25.02.2024 அன்று மிகச் சிறப்பாக இடம் பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தார்.
மட்டக்களப்பு கோட்டமுனை விளையாட்டுக்கழகத்தின் அனுசரனையில் மண்முனை மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களிற்கிடையில் கிரிக்கெட் திறனை பரீட்சிப்பதற்கான களமாக இப்போட்டிகள் அமைந்திருந்தன. 15 வயது மாணவர்களுக்கான 10 ஓவர் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் மண்முனை மேற்கு கல்வி வலயத்தில் உள்ள எழு பாடசாலைகள் இப்போட்டித்தொடரில் கலந்து கொண்டு தமது திறமைகளை வெளிக்காட்டினர்.
கண்ணன்குடா மகா வித்தியாலய அணியினரிற்கும் கரையாக்கன் தீவு விநாயர் பாடசாலை அணியினரிற்கும் இடையில் விறுவிறுப்பான இறுதிப் போட்டி இடம் பெற்றதில் கண்ணன்குடா பாடசாலை அணியினர் முதலில் துடுப்பெடுத்தாடி, 60 பந்துகளில் 06 விக்கட்டுக்களை இழந்து 124 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் கரையக்கன் தீவு பாடசால அணியினர் 6 விக்கட்டுக்களை இழந்து 60 பந்திற்கு முகம்கொடுத்து 94 ஒட்டங்களை பெற்றிருந்த நிலையில் 30 ஓட்டங்களால் கண்ணன்குடா மகா வித்தியாலய அணியினர் வெற்றியினை தமதாக்கி கொண்டனர்.இந்நிகழ்விற்கு உடற்கல்வி உதவி கல்வி பணிப்பாளர் எஸ்.சந்திரகுமார், கோட்டமுனை விளையாட்டு கழகத்தின் தலைவர் பி.சடாட்சரராஜா, மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர், கோட்டைமுனை விளையாட்டு கழக உறுப்பினர் என பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.







