
புளியந்தீவு பகுதியில் காணப்படும் பாடசாலை மாணவர்களுக்கு விளையாட்டு மைதானத்தினை பெற்றுக் கொடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் 29.02.2024 அன்று மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சருமான சிவ.சந்திரகாந்தன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இக்கலந்துரையாடலில் புளியந்தீவில் காணப்படும் நான்கு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு விளையாட்டு மைதானம் இன்மை பாரிய ஒரு குறையாக காணப்படுவதுடன், மிக விரைவில் அதற்கான தீர்வை காண வழிவகையினை ஏற்படுத்த வேண்டும் எனும் நோக்கில் இராஜாங்க அமைச்சரின் ஆலோசனைக்கு அமைவாக துறைசார் நிபுணர்களுடன் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவு பாடசாலை மாணவர்கள் கல்வி கற்கும் பிரதேசமாக புளியந்தீவு காணப்படுகின்ற போதிலும் அவர்களுக்கான விளையாட்டு திறமைகளை மேம்படுத்திக் கொள்வதற்காக மைதானமின்மை என்பது பாரியதொரு குறையாக காணப்படுவதாக இதன் போது சுட்டிக்காட்டப்பட்டது. இதன் போது மைதானம் அமைப்பதற்கான சாத்தியமான நில வளம் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன், இராஜாங்க அமைச்சரால் பல்வேறு பட்ட ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டது. மாணவர்களின் உடல் உள ஆரோக்கியத்தினை மேம்படுத்தும் விளையாட்டுத் துறையின் களமான மைதானத்தை மிக விரைவில் அமைத்து தருவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்வதாக இதன் போது இராஜாங்க அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன், மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரின் பிரத்தியேக செயலாளர் த.தஜீவரன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ரி. நிர்மலன், துறைசார் வைத்தியர்கள், வலய கல்வி பணிப்பாளர், அதிபர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.







