
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்களுக்கும் மாவட்ட வர்த்தக தைத்தொழில் விவசாய சம்மேளன பிரதிநிதிகளுக்குமிடையில் மாவட்டத்தில் விவசாயத்தை நவீன முறையில் மேற்கொள்ளுதல் தொடர்பான முன்மொழிவுகள் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் 05.03.2024 அன்று இடம்பெற்றது. விவசாய நடவடிக்கைகளின் போது எதிர்வரும் காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய தொழில்நுட்பம் மற்றும் புதிய இலத்திரனியல் பாவனையை அறிமுகப்படுத்தி சிறந்த விளைச்சலை பெற்றுக் கொள்வதற்கு தேவையான முன்மொழிவுகள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நெல் உலர்த்தும் இயந்திரம், மண்ணின் தரப் பரிசோதனை செய்வதற்காக ஆய்வு கூடம், நெல் களஞ்சியசாலை தொடர்பாகவும் இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. இதன் போது விவசாயிகள் விவசாயத்தை மேற்கொள்ளும் போது எதிர் நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்களுக்கு துறைசார் நிபுணர்களினால் தீர்வு வழங்குவதற்கான கலந்துரையாடல் பிரதேச மட்டத்தில் ஏற்படுத்த வேண்டும் என இதன்போது அரசாங்க அதிபரிடம் கோரிக்கை முன்வைத்ததுடன், விவசாய நடவடிக்கையில் ஈடுபடும் போது பல்கலைக்கழகம், துறைசார் நிபுணர்கள், விவசாயிகள் என அனைவரையும் ஒன்றினைத்து மாவட்டத்தில் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. இந் நிகழ்வில் மாவட்ட செயலக விவசாய பணிப்பாளர் எம். எஃ .ஏ.சனிர், விவசாய திணைக்களத்தின் (விரிவாக்கம்) பிரதிப் பணிப்பாளர் எம்.பரமேஸ்வரன் என பலர் கலந்து கொண்டனர்.






