மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் நேற்று காலை 9.30 மணியளவில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் ஆரம்ப உரையுடன் ஆரம்பிக்கப்பட்டது. இணைக்குழு தலைவரான ஆரம்பக்கைத்தொழில் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் கெளரவ அலிஸாகீர் மௌலானா அவர்கள், மற்றும் பாராளுமன்றஉறுப்பினர் கெளரவ ஞானமுத்து சிறிநேசன் அவர்கள் இருவரின் தலைமையில் நடைபெற்றது.
இவ் அபிவிருத்திக்குழு கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் கெளரவ அலிஸாகீர் மௌலானா அவர்கள் உரையாற்றுகையில் இவ் அரசாங்கம் நான்கு ஆண்டுகள் பூர்த்தி செய்த நிலையில் ஜனநாயக ஊடக சுதந்திரம், காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகம், அயல் பாடசாலை சிறந்த பாடசாலை திட்டம், சிறந்த நிதி முகாமைத்துவத்தின் கீழான அபிவிருத்திப்பணிகள், உயர் தரத்திலான வைத்தியசாலைப் பணிகள், முக்கியமான மருந்துகளுக்கான விலைக்குறைப்பு, சமூர்த்தி ஊக்குவிப்புதிட்டத்தில் இதுவரை 28,000 குடும்பங்களுக்கு சமூர்த்தி கொடுப்பனவு வழங்கியமை, அதற்கு மேலான அரச சேவையில் பணியாற்றிக் கொண்டிருக்கின்ற உத்தியோகத்தர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான அளப்பரிய சேவையினை இவ் அரசாங்கம் ஆற்றியது எனவும் அபிவிருத்தி வேலைகளுக்கு ஒதுக்கீடு செய்கின்ற நிதிகளை நேர்த்தியாகவும், சிறப்பாகவும், நடைமுறைப்படுத்துகின்ற அரச உத்தியோகத்தர்களுக்கு பாராட்டையும் தெரிவித்தார்.
தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ ஞானமுத்து சிறிநேசன் அவர்கள் உரையாற்றுகையில் கடந்த காலங்களை விட அதிகளவு நிதியினைக்கொண்டு மாவட்டத்தின் எல்லா பகுதிகளுக்கும் அபிவிருத்தியினை விஸ்தரிக்க கூடியளவு இவ் அரசாங்கத்துடன் செயற்பட்டிருக்கின்றோம் என்றும், இம்முறை 400 மில்லியன் ரூபாக்கள் அபிவிருத்திக்காக செலவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது எனக் கூறினார்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட முன்னேற்றமீளாய்வுகள் இடம்பெற்றது. இதில் குறிப்பாக விவசாயம், மீன்பிடி, கால்நடை, வீதி அபிவிருத்தி, கம்பெரலிய, என்றப்பிறைஸ் சிறிலங்கா, ஆகியவற்றை மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டு விரைவில் வேலைகளை முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு குழு இணைத்தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் விசேடமாக வவுணதீவு பிரதேசத்தில் இருந்து பொலனறுவை மாவட்டத்திற்கு வனப்பகுதிக்கூடாக 37KM பாதை நிர்மாணிப்புப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது தொடர்பாக இச்சபையில் விவாதத்திற்கு எடுக்கப்பட்டது. இதுவரை 7KM பாதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் வனலாகா அதிகாரி தெரிவித்தார். இப்பாதையினூடாக சட்டவிரோத மணல்மண், மாடுகள், கடத்தும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக இடம்பெறுவது சுட்டிக்காட்டப்பட்டது. இதனை மாவட்ட அபிவிருத்திகுழுவின் அனுமதியின்றி செயற்படுத்துவதை மாவட்ட அபிவிருத்திக்குழு இடைநிறுத்தும்படியும் மூவர் அடங்கிய குழுவினை அமைத்து தீர்வு எட்டும் வரை நிறுத்திவைக்க தீர்மானிக்கப்பட்டது.
ஜனாதிபதியின் விசேட வேலைத்திட்டத்தில் 5 பிரதேச செயலகங்களுக்கு புதிய கட்டிடம் அமைத்தல், மாவட்ட செயலகத்துக்கு புதிய கட்டிடம் 804 மில்லியன் ரூபாவில் அமைக்கப்பட்டு வருகின்றது. அதனை துரிதப்படுத்தும் படியும் சபையில் வேண்டப்பட்டது.







