
மட்டக்களப்பில் "ஆணிகள் வரைந்த ஓவியம் " எனும் தொனிப்பொருளில் பாஸ்கா நாட்டிய நாடகம் காந்தி பூங்கா திறந்த வெளியில் 24.03.2024 அன்று இடம் பெற்றது. புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலையம் இணைந்து நாடாத்திய "ஆணிகள் வரைந்த ஓவியம் " பாஸ்கா நாட்டிய நாடக நிகழ்வில், பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட ஆயர் அதிவந்தனைக்குரிய கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை கலந்து கொண்டதுடன் கெளரவ அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் கலந்து கொண்டார்.
கிறிஸ்தவர்களின் புனித வாரத்தினை நினைவு கூரும் முகமாக மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலைய மாணவிகளினால் உயிர் ஓட்டமான நடிப்பில் பாஸ்கா நிகழ்வுகள் முதன்முறையாக திறந்த வெளியில் கலாசார உத்தியோகத்தர் திருமதி ரஞ்சித் அமிலினியின் நெறியாக்கத்தின் கீழ் அரங்கேற்றப்பட்டது. இதன் போது புனித சிசிலியா தேசிய பாடசாலை மாணவி ரவிக்குமார் ஷயனாவினால் பாஸ்காவை பிரதிபலிக்கும் ஓவியம் அதிதிகளுக்கு வழங்கப்பட்டது. அதேசமயம் இந் நிகழ்வில் கலைஞர்களுக்கு அதிதிகளினால் மலர்மாலை அணிவித்து கெளரவம் வழங்கப்பட்டது.
மனித குலத்தை ஆழமாகப் பாதிக்கின்ற பாவம், சாவு ஆகியவற்றை இயேசுபிரான் தம் சிலுவைச் சாவினாலும் உயிர்த்தெழுதலாலும் வென்று, மனிதருக்குப் புது வாழ்வு அளித்து, அவர்கள் நிறைவான பேரின்பம் அடைய வானக வழியைத் திறந்தார் என்று கிறிஸ்த்தவர்கள் நம்புவதால் கிறிஸ்தவ வழிபாட்டு ஆண்டின் மையமாக இவ்விழாவினை நினைவு கூறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் திலக் நந்தன கெட்டியாரச்சி, மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஶ்ரீகாந்த், 231 படைப்பிரின் கட்டளைத் தளபதி பிரிகேடியர், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி. வாசுதேவன், புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் கலாநிதி பிரசாத் ரனசிங்க, கிழக்கு பல்கலைக்கழக பீடாதிபதி கலாநிதி ஜீ. கென்னடி மற்றும் உயர் அதிகாரிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.








