
மட்டக்களப்பில் சமுர்த்தி அபிமானி விற்பனைக் கண்காட்சி நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு வி. வாசுதேவன் அவர்களின் தலைமையில் கொக்குவில் பொது சந்தையில் 08.04.2024 அன்று இடம் பெற்றது.இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் கலந்துகொண்டதுடன் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திரு ராஜ்பாபு அவர்களும் கலந்து கொண்டார்.
மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் சமுர்த்தி திணைக்களமும் இணைந்து கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் சமுர்த்தி பயனாளிகளினால் உற்பத்தி செய்யப்பட்ட உற்பத்திப் பொருட்கள் இங்கு விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதன்போது கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் எமது மாவட்டத்தில் சுய தொழில் முயற்சி உற்பத்திகளை அதிகரித்து உள்ளூர் உற்பத்திகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முன் வரவேண்டும் என தெரிவித்தார். இந்நிகழ்வில் மண்முனை மேற்கு உதவிப் பிரதேச செயலாளர் சுபா சுதாகரன், சமுர்த்தி சிரேஸ்ட முகாமையாளர்கள் மற்றும் தலைமையக முகாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பிரதேச உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.







