
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நன்னீர் இறால் வளர்ப்பு வேலைத்திட்டங்களை துரிதப்படுத்தி அபிவிருத்தி செய்து புதிய முதலீட்டாளர்களை ஊக்குவித்தல் தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவ சத்திரகாந்தன் அவர்கள் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் 09.04.2024 அன்று இடம் பெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இந் நிகழ்வில் மாவட்டத்தில் புதிய தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி நன்னீர் இறால் அதனுடன் மீன் மற்றும் நண்டு வளர்ப்பினை அபிவிருத்தி செய்தல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இதன் போது வாகரை பிரதேச செயலக பிரிவில் நீர் வாழ் உயிரினச் செய்கை அபிவிருத்தியை மேற்கொண்டு புதிய முதலிட்டாளர்களை ஊக்குவித்தல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இதன் போது கருத்து தெரிவித்த ஆளுநர் மாவட்டத்தில் உள்ளூர் இறால் வளர்ப்பிற்கு பல இன இறால்களை உற்பத்தி செய்வதனால் அதிகளவான விளைச்சல்கலை பெற்றுக் கொள்வதுடன் பல இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்க முடியும் என தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் கருத்து தெரிவிக்கையில் தொழில் வாண்மை நிபுணர்களினால் ஆய்வு செய்து சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இறால் வளர்ப்பை மேற்கொள்ள வேண்டும் எனவும் மேலும் இப்பிரதேச மக்களை உள்வாங்கி மக்களுக்கு இறால் வளர்ப்பு தொடர்பான சிறந்த அறிவினை கொடுத்து உள்ளூர் உற்பத்தியை அதிகரித்து வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என தெரிவித்தார். இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த், மாகாண பணிப்பாளர், வாகரை பிரதேச செயலாளர் அருணன் மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரின் பிரத்தியோக செயலாளர் த.தஜீவரன் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.






