
மட்டக்களப்பு அரசாங்க அதிபர் வெற்றிக்கிண்ண மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பிலுள்ள பிரதேச செயலகங்கள், அரச திணைக்களங்களுக்கிடையிலான மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டித்தொடர் ஒன்றினை மாவட்ட செயலகம் கடந்த 3 தினங்களாக நடாத்தி வருகின்றது.
எட்டு ஓவர்கள் கொண்ட இந்த மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியானது ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலாருக்கும் வேறுவேறாக இருதயபுரம் எவகிறீன் மைதானம், மட்டக்களப்பு பாட்டாளிபுரம் மைதானம் என்பவற்றில் இடம்பெற்று வருகின்றன. இதில் முதல் சுற்று லீக் போட்டிகளாகவும், இரண்டாம் சுற்று நொக் அவுட் முறையிலும் இடம்பெறவுள்ளன. மூன்றாவது தினமாகிய 03.052024 அன்று பாட்டாளி புரம் மைதானத்தில் பெண்களுக்கான 3வது போட்டியாக மட்டக்களப்பு நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் மாவட்ட செயலக பெண்கள் அணிக்கிடையிலான போட்டியாக அமைந்திருந்தது. இதில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நீர்ப்பாசன திணைக்கள அணி முதலில் துடுப்பெடுத்தாடி 6 விக்கட்டுகளை இழந்து 47 ஓட்டங்களைப் பெறிறிருந்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மாவட்ட செயலக அணி ஐந்தாவது ஓவரின் இரண்டாவது பங்து வீச்சில் விக்கட் இழப்பின்றி 56 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமணை மற்றும் கிழக்குப் பல்கலைக் கழக பெண்கள் அணிக்கிடையிலான போட்டியும் இடம்பெற்று வருகின்றது. இப்போட்டிகளை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டினா முரளிதரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார். இப்போட்டி நிகழ்வுகளைக் கண்டுகளிக்க சம்மந்தப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் பலரும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.







