
தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையின் 32வது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம் தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையின் தலைவரும் ஸ்தாபகருமான நா.இதயராஜன் தலைமையில் தரிசனம் பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வின் ஆன்மிக அதிதியாக ராமகிருஸ்ண மிசன் பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தா மஹாராஜ் கலந்து கொண்டதுடன் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையானது 1992ம் ஆண்டு முதல் விழிப்புலனற்றோர் கல்வி வளர்ச்சிக்கு பாரிய சேவையாற்றிவருவதுடன் இப் பாடசாலையினால் 37 பட்டதாரிகள் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 32 வருட நிறைவினை கொண்டாடும் முகமாக பிரதம அதிதியினால் கேக் வெட்டி மாணவர்களுக்கு பகிரப்பட்டது.
இதன் போது தரிசனம் பாடசாலை மாணவர்களினால் கவிதைகள், சிறப்பு பேச்சு, இசை வாத்தியங்கள் இசைத்து பாடல்கள் அரங்கேற்றப்பட்டது சிறப்பம்சமாகும். இதன்போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் விழிப்புலனற்றோர்களின் பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொடுப்பதற்கு அவர்களுக்கு சிறந்த கல்வி வழங்கி வளப்படுத்த வேண்டும் என்பதுடன் தரிசனம் நிறுவத்தின் 32 வருட சேவையையும் பாராட்டினார். இந்நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழகம் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் பேராசிரியர் புளோரன்ஸ் பாரதி கெனடி, ஆசிரியை திருமதி புஸ்பலோஜினி உமாகாந்தன், தரிசனம் நிர்வாக சபை உறுப்பினர்கள், மற்றும் பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.








