
இலங்கை தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில் சமய சகவாழ்வை கட்டியெழுப்பும் நோக்கிலான சர்வ சமயக்குழுக்களின் அனுபவ பரிமாற்று விஜயம் 30.05.2024 அன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. இலங்கை தேசிய சமாதான பேரவையின் செயற்றிட்ட முகாமையாளர் எம்.யூ.மதனி உவைஸ் தலைமையில் மட்டக்களப்பு கல்லடியில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளார்.
பிரதம அதிதி உள்ளிட்ட பண்டாரவளை நகரில் இருந்து வருகைதந்த சர்வமத குழுவினர் மற்றும் ஏனைய அதிதிகள் அனைவரும் கல்லடி மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகாமையில் இருந்து பாரம்பரிய கலாசார முறைப்படி வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் கலாசார நடனம் மற்றும் இஸ்லாமிய பாரம்பரிய இர்பான் அடித்தல் உள்ளிட்ட நிகழ்வுகள் அரங்கை அலங்கரித்ததுடன் அதிதிகளின் உரைகளும் இடம்பெற்றது. இதன்போது சர்வ சமயக் குழுக்களின் அனுபவ பரிமாற்றம் இடம்பெற்றதுடன், சர்வ மத ஒற்றுமையினை மேம்படுத்தும் வகையிலான கருத்தாடல்களும் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.






