
மட்டக்களப்பு மாவட்டத்தில் வன இலாக திணைக்களத்தினால் காணிகள் விடுவிக்கப்படவுள்ளமை தொடர்பான விசேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையில் அமையப்பெற்றுள்ள மாவட்ட செயலகத்தின் நிருவாக கட்டடத்தில் இடம் பெற்ற குறித்த கலந்துரையாடலில் வன வள திணைக்கள பணிப்பாளர் நாயகம் இ.ஏ.பி.என். எதிரிசிங்க அவர்கள் கலந்துகொண்டிருந்தார்.
வன திணைக்களத்திற்கு வர்த்தமானி பத்திரத்தில் வெளியிடப்பட்ட நிலங்களில் சில பகுதியினை விடுவிப்பதற்கான உயர் மட்ட கலத்துரையாடல் இதன்போது நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக குறித்த காணிகள் விடுவிக்கப்படவுள்ளன.மேலும் மாவட்டத்தின் ஆறு பிரதேச செயலக பிரிவுகளில் அடையாளப்படுத்தப்பட்ட காணிகள் காணி ஆணையாளர் நாயகத்திற்கு கையகப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளபடுவதாக வன திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். இக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி நவருபரஞ்சினி முகுந்தன், சமன் ரணசிங்க, பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், வனலாக திணைக்கள உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.







