
அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் மயிலத்தமடு,மாதவனை பிரதேசத்திற்கு களவிஜயம் ஒன்றினை 02.07.2024 அன்று மேற்கொண்டார். மட்டக்களப்பு பண்ணையாளர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் முகமாக அரசாங்க அதிபர் தலைமையிலான குழுவினர் இக்களவிஜயத்தினை முன்னெடுத்து இருந்தனர்.
மாவட்டத்தின் எல்லையோர பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை சுமூகமாக தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் இதன் போது அரசாங்க அதிபரினால் மேற்கொள்ளப்பட்டதுடன் மகாவலி அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் மகாவலி வலயம் (B) வதிவிட திட்ட முகாமையாளர் டபிள்யூ எம்.சுகத்வீரசிங்கவின் ஏற்பட்டில் வெலிகந்தை மகாவலி வலய அலுவலகத்தில் இடம் பெற்றது. மகாவலி அதிகார சபையினரினால் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான விளக்கங்கள் இதன் போது அரசாங்க அதிபருக்கு அளிக்கை செய்யப்பட்டது.
மேலும் மகாவலி அதிகாரசபையின் பிரதான திட்ட முன்மொழிவிற்கு மேலதிகமாக ஏறாவூர் பற்று மற்றும் கிரான் பிரதேச பிரிவுகளிற்கு உற்பட்ட ஈரழக்குளம், குடும்பிமலை ஆகிய பிரிவுகளில் 3000 ஏக்கர் காணி மேச்சல் தரையாக ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு எல்லைக்கல் இடப்பட்டு பண்ணையாளர்களுக்காக கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்திற்கு கையளிக்கப்படவுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் மற்றும் அம்பாறை மாவட்ட செயலாளருடன் கலந்துரையாடியதற்கு அமைவாக அத்துமீறி பயிர்ச்செய்கையில் ஈடுபடும் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளை இப்பகுதியில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளாதிருக்க அம்பாறை அரசாங்க அதிபர் மற்றும் மகாவலி அதிகார சபையினர் இணங்கி கொண்டனர்.மேலும் கால்நடை பண்ணையாளரின் வேண்டுகோளுக்கு அமைவாக மகாவலி அபிவிருத்தி சபையினரினால் கிரவல் வீதிகள் புணரமைக்கப்படவுள்ளதுடன் அவர்களினால் குறிப்பிடப்பட்ட ஐந்து சிறுகுளங்களும் புணரமைத்தல், புதிய பால்சேகரிக்கும் நிலையம் அமைத்தல், மகாவலி அதிகாரசபையின் புதிய அலுவலகங்களை கிரான் பிரதேச செயலக பிரிவில் அமைத்தல் தொடர்பாகவும் இதன்போது கலத்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி நவருபரஞ்சினி முகுந்தன், ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம், கிரான் பிரதேச செயலாளர் கே.சித்திரவேல், கமநல சேவைகள் திணைக்கள ஆணையார் ஜெகநாத், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆர். ஜதிஸ்குமார், மாவட்ட கால்நடை வைத்தியர், நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள், மகாவலி பிரதேச முகாமையாளர் திருமதி சசி மற்றும் உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.






