
இராஜாங்க அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான சிவ சந்திரகாந்தன் அவர்களின் தலைமையில் தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தின் கடந்த காலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலகத்தில் 18.07.2024 அன்று இடம்பெற்றது.
வாகனேரி, குஞ்சங்குளம், கிரிமிச்சை, வெப்பைவெட்டுவான், வட்டவான் போன்ற பல பிரதேசங்களில் மக்கள் குடிநீர் பெற்றுக் கொள்வதில் அசௌகரியப்பட்டு வருவதை இதன்போது அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர் அம்மக்களின் அடிப்படைத் தேவையான குடிநீரை மிக விரைவாக வழங்க வேண்டும் என பணிப்புரை விடுத்தார். இப் பிரதேசங்களுக்கு நீர் வழங்கலுக்கு தடையாக உள்ள காரணிகள் தொடர்பாகவும் கலந்துரையாடியதுடன் மக்களின் குடிநீர் வழங்குவதற்காக அரச சார்பற்ற நிறுவனங்களின் பங்களிப்பை பெற்றுக் கொள்வதற்கு நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் நீர் ஊற்று உள்ள பிரதேசங்களில் புதிய கிணறுகளை அமைத்தல் அல்லது பழைய கிணறுகளின் ஆழத்தை அதிகரித்து சுத்தமான குடிநீரை வடிகட்டி மக்களுக்கு வழங்க பணிப்புரை விடுத்தார்.
இந் நிகழ்வில் வாகரை பிரதேச செயலாளர் ஜி.அருணன், தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்கள பொறியியலாளர்,பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரின் பிரத்தியோக செயலாளர் த.தஜீவரன், உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.






