
மட்டக்களப்பில் அரச உத்தியோகத்தர்களுக்கு சைகைமொழி பயிற்சி நெறியானது மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் பழைய மாவட்ட செயலகத்தில் 13.08.2024 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இப்பயிற்சி நெறியானது மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் பொது நிர்வாக அமைச்சின் நிதி அனுசரனையில் மூன்றுமாத காலத்தை உள்ளடக்கியது. இப்பயிற்சி நெறியானது மாவட்டத்தின் 14 பிரதேச பிரிவுகளில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
இக்கற்கை நெறிக்கான பிரதான வளவாளராக ஓய்வு நிலை பிரதிக்கல்வி பணிப்பாளர் ( விசேட கல்வி) தயாநந்தன் மற்றும் சைகை மொழிப்பயிற்சி வழங்குவதற்காக வாழ்வோசை பாடசாலை அதிபர் திருமதி சி.ஏ. தயாமதி வளவாடினர். அரச உத்தியோகத்தர்கள், விசேட தேவைக்குரியவர்களுடன் தொடர்பாடலை மேம்படுத்துவதற்கு சைகைமொழியின் அவசியம் உணரப்பட்டுள்ளது.
விசேட தேவையுடையவர்களான செவிப்புலன் அற்ற மற்றும் வாய் பேச முடியாதவர்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்குவதற்கும் சைகை மொழியின் தேவை உணரப்பட்டு மாவட்ட செயலகத்தினால் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் , திருமதி நவரூபரஞ்சினி முகுத்தன் (காணி), விசேட கல்வி ஆசிரிய ஆலோசகர் எஸ்.சிவகுமார், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் திருமதி ச. கோணேஸ்வரன், வை. எம்.சி.ஏ. பதில் பொது செயலாளர் எஸ். பற்றிக் ஆகியோர் கலந்துகொண்டனர்.







