
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் காப்புறுதி மற்றும் நஷ்டஈடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 04.10.2024 அன்று இடம்பெற்றது.
2024 / 2025 வருடத்திற்கான பெரும்போக விவசாய நடவடிக்கைகள் எதிர்வரும் நாட்களில் மாவட்டத்தில் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதனால் விவசாயிகளுக்கான காப்புறுதிகளை உரிய வகையில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன்போது விவசாயிகளின் பயிர்களுக்கு சேதம் ஏற்பட்டு 14 நாட்களினுல் கமநல சேவை திணைக்களத்திற்கு விவசாயிகள் எழுத்து மூலமாக அறிவிக்க வேண்டும் மேலும் உரிய காலப்பகுதியினுள் விவசாய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இதன்போது கருத்துத்தெரிவிக்கப்பட்டது.
முதலாம் கட்டம் 40% இரண்டாம் கட்டம் 60% மற்றும் மூன்றாம் கட்டத்திற்கு 100% வழங்கப்படவுள்ளதுடன், மேலும் பாதிப்பின் மதிப்பீடானது சேதம், பாதியளவில் சேதம், அழிவு என மதிப்பிட்டாளர்க்குழு சிபாரிசின் மூலம் வழங்கப்படவுள்ளது. இந்நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக விவசாய பணிப்பாளர் எம். எஃ .ஏ.சனிர், கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபையின் மாவட்ட உதவி பணிப்பாளர் எ.கவந்தீசன், பெரும்பாக உத்தியோகத்தர்கள், கமநல சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.






