
மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் பொலிஸ் நிலையங்கள், தேர்தல் அலுவலகம் ஆகியவற்றில் 30.10.2024 அன்று காலை 8.30 மணி முதல் தபால் மூல வாக்களிப்பு ஆரம்பமாகி சுமூகமான முறையில் இடம்பெற்று வருகின்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி.ஜஸ்டினா முரளீதரன் அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் சட்டத்தரணி எம்.பி.எம்.சுபியான் மேற்பார்வையின் கீழ் தபால் மூல வாக்களிப்பானது இடம்பெற்றது. திராய்மடுவில் அமைந்துள்ள புதிய மாவட்ட செயலகத்திலும், மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திலும் விசேடமாக அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களில் கட்சிகள் சார்பில் பிரதி நிதிகள் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். தபால் மூல வாக்களிப்பு செயற்பாட்டில் மாவட்ட செயலக மற்றும் பொலிஸ் திணைக்கள உத்தியோகத்தர்கள் மிகவும் ஆர்வத்துடன் வாக்களிப்பில் ஈடுபட்டதனையும் அவதானிக்க முடிகின்றது. அத்தோடு மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை தபால் மூல வாக்களிப்பிற்கு 14,003 உத்தியோகத்தர்கள் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.






