
மட்டக்களப்பில் களப்பு நீர் ஏரிகளை முகாமைத்துவம் செய்தல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் 25.11.2024 அன்று இடம்பெற்றது. வெள்ள காலங்களில் களப்பின் நீர் மட்டம் அதிகரித்தல், விளைநிலங்களில் தாழ்தல், கண்டல் தாவரங்களை நட்டு உயிர் பல்வகைமையை பாதுகாத்தல், மற்றும் வெள்ளப்பெருக்கின் பாதிப்பை குறைப்பதற்கும் களப்பில் சேர்கின்ற மண்ணை அகற்றுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய அவசியம் மற்றும் களப்பு நிலங்களை சட்டவிரோதமாக மூடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல், மேலும் பாதிப்பிற்குள்ளாகும் விவசாய விளை நிலங்களை அளவீடு செய்தல் தொடர்பாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
காலநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்படும் பாதிப்புக்களில் இருந்து மக்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் தொடர்பாக துறைசார் நிபுணர்களுடன் கலந்துரையாடப்பட்டது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த், கமநல சேவைகள் திணைக்கள பிரதி ஆணையார் ஜகன்நாத், பொறியியலாளர்கள், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், பதவி நிலை அதிகாரிகள், கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், துறைசார் நிபுணர்கள், உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.






