
சுனாமி பேரலையினால் உயிர்நீத்த மக்களை நினைவு கூறும் முகமாக 26.12.2024 அன்று காலை மட்டக்களப்பு மாவட்ட செயலக வளாகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.மட்டக்களப்பு மாவட்டத்தில் எட்டு பிரதேசசெயலகப்பிரிவுகளை சேர்ந்த 68 கிராம சேவகர் பிரிவுகளில் சுனாமி அனர்த்தம் பெரிதும் பாதிப்பினை ஏற்படுத்தியிருந்தது.
இச்சுனாமி பேரலையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2840 பேர் மரணமடைந்ததோடு 908 பேர் காணாமல் போயும் உள்ளனர். மேலும் 18041 பேர் தமது வீடுகளையும் இழந்த நிலையே மட்டக்களப்பில் காணப்பட்டது. இவ்வாறான இயற்கை சீற்றத்தினால் உயிரிழந்த காணாமல் போனவர்களை நினைவு கூரும் நாளாக இலங்கை அரசு இத்தினத்தை தேசிய பாதுகாப்பு தினமாக பிரகடனப்படுத்தி ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 26ம் திகதி 9 மணிக்கு அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இன்றுடன் சுனாமி பேரலை ஏற்பட்டு 20 வருடங்களைப்பூர்த்தியாகிய நிலையில் இவ்வனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் மற்றும் காணாமல போனோரின் ஆத்மா சாந்தி அடைவதற்காக பிராத்தனையும் நடைபெற்றது. இலங்கையில் ஏற்பட்ட சுனாமி பேரலையினால் 35 ஆயிரம் பேர்களின் உயிர் காவு கொள்ளப்பட்டது. அதே போன்று 5637 பேர் காணாமல் போயிருந்தனர். 9 இலட்சம் வீடுகள் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டிருந்தமையுடன், இச்சுனாமி பேரலையினால் 40 வீதமான சிறுவர்களின் உயிர்கள் இழக்கப்பட்டிருந்தமை நினைவு கூர வேண்டியதாகும்.
இந்நிகழ்வில் சர்வமத தலைவர்கள், மேலதிக அரசாங்க அதிபர் திருமதி எஸ்.ஸ்ரீகாந்த், உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன், மாவட்ட செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப்பணிப்பாளர் எ.எஸ்.எம் சியாத், பிரதம உள்ளக கணக்காளர், மாவட்ட செயலக கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர் மற்றும் பதவி நிலை உத்தியோகத்தர்கள் அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.








