
மட்டக்களப்பில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் நேரில் சென்று களஆய்வை மேற்கொண்டார். செங்கலடி பிரதேச செயலக பிரிவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு கொம்மாதுரை விநாயர் வித்தியாலயத்தின் இடைத்தங்கல் முகாமில் உள்ளவர்களை பார்வையிட்டார்.
மாவட்டத்தில் ஒன்பது இடைத்தங்கல் முகாம்களில் 334 குடும்பங்களைச் சேர்ந்த 921 நபர்கள் தங்கியுள்ளனர். மேலும் 3037 குடும்பங்களைச் சேர்ந்த 10031 நபர்கள் உறவினர் நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளதுடன் அனர்த்தத்தினால் 17 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இக்களவிஜயத்தின் போது ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் கே. தனபாலசுந்தரம் , உதவி பிரதேச செயலாளர் திருமதி. நிருபா பிருந்தன், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் ஏ.எஸ்.எம் சியாத், அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர் எம். சுரேஸ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக வெள்ள நீர் அதிகரித்து வருவதனால் உள்ளூர் போக்குவரத்து தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. இதனால் மாவட்டத்தின் பல பகுதிகளில் பிரதான கால்வாய்கள், ஆறுகள், மற்றும் தாழ்நில பிரதேசங்களில் போக்குவரத்தில் ஈடுபடும் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.







