
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் கல்வி கற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கு நிகழ்வு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதி பணிப்பாளர் திருமதி அருள்மொழி நிஷா அவர்களின் தலைமையில் கிழக்கு பல்கலைக்கழக விபுலானந்தா அழகியல் கற்கை நிறுவக மாநாட்டு மண்டபத்தில் 08.02.2025 அன்று இடம்பெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.
புதுக்குடியிருப்பு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் ஆறு மாத தொழிற்பயிற்சி கற்கை நெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு இதன்போது சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன. ஆங்கிலம், சிங்கள மொழிகற்கைகளையும், தகவல் தொழில்நுட்பம், தையல், அழகுக்கலை போன்ற பாடநெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது. மூன்றாம் நிலை தொழிற்கல்வியானது மாணவர்களை சிறப்பு தேர்ச்சி மிக்கவர்களாக மாற்றுவதற்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் கற்கை நெறிகள் கற்பிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்தாகும்.
சுயதொழில் மற்றும் உள்நாட்டில் மற்றும் வெளிநாட்டில் தொழில் வாய்ப்பை பெற்றுக் கொள்வதற்கு தேவையான பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் எம் ஜி சுசந்த, புதுக்குடியிருப்பு இளைஞர் பயிற்சி நிலைய பொறுப்பதிகாரி என் குகதாஸ், மாகாண பணிமனை உதவிப்பணிப்பாளர் ஜனாப் முபாறக்கலி, மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகள் மா.சசிக்குமார், திருமதி.கி.சதீஸ்வரி, திரு.அ.தயாசீலன், ஓட்டமாவடி பயிற்சி நிலைய பொறுப்பதிகாரி ஜனாப் எ . எம் கனீபா உள்ளிட்ட அதிதிகள் கலந்து கொண்டு மாணவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.







