
மட்டக்களப்பு மாவட்டத்தில் Air Brush work shop மணப்பெண் அலங்கார கண்காட்சி நிகழ்வானது 20.02.2025 அன்று இடம்பெற்றது. அபக்ஸ் கம்பஸ் நிறுவனத்தின் (Apax Campus Batticaloa ) பொது முகாமையாளர் என். கோகுலதாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
மாவட்டத்தில் பெண் சிறுதொழில் முயற்சியாளர்களின் தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் சர்வதேச தரத்திலான அழகுக்கலை பயிற்சிகளையும் உயர் கல்விகளையும் அபக்ஸ் கம்பஸ் வழங்கி வருகின்றது. பயிற்றுவிக்கப்பட்ட அழகுக்கலை பயிற்சியாளர்களின் அழகுக்கலையினை காட்சிப்படுத்தும் மணப்பெண் அலங்கார கண்காட்சி நிகழ்வு கோலாகலமாக இடம்பெற்றது. சாதனை பெண்களான சிரேஸ்ட அழகு கலை நிபுணர்களுக்கு நினைவுச்சின்னம் வழங்கி அதிதிகளினால் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். ஆஷிப் பன்ஷி நிறுவனத்தின் நிதி அனுசரணையில் இந் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது இலங்கைக்கான முயற்சியாளர் மன்றம் ( Global Entrepreneurs Nation forum ) மேலதிக அரசாங்க அதிபரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வில் இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் மாவட்ட பணிப்பாளர் ஏ.ஏ திஸ்ஸ நாயக்க, மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் என். தனஞ்ஜயன், அபக்ஸ் கம்பசின் முகாமைத்துவ பணிப்பாளர் எம். எஸ். ரிஸ்வான், பணிப்பாளர் எஸ். ஐ.எம். ரிழா, ஆஷிப் பன்ஷி நிறுவனத்தின் பணிப்பாளர் ஏ.எல்.எஸ் ஹமீட், துறைசார் நிபுணர்கள், அழகுகலை பயிற்றுவிப்பாளர்கள், பெற்றார் என பலர் கலந்து கொண்டனர். அழகுக்கலை சங்கத்தினால் மாவட்டத்தில் பல சமூக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.







