
இரண்டாம் மொழி சிங்கள கற்கை நெறியினை நிறைவு செய்த உத்தியோகத்தர்களின் கலாச்சார மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் 23.02.2025 அன்று இடம்பெற்றது. அரச சேவையினை வழங்கும் உத்தியோகத்தர்களின் மொழி அறிவினை மேம்படுத்துவதற்கு தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் ,மாவட்ட செயலக ஒருங்கிணைப்பில் மொழிகள் மத்திய பயிற்சி நிலையத்தில் தமிழ்மொழி அரச உத்தியோகத்தர்களுக்கான 100 மணித்தியால கற்கைநெறி வழங்கப்பட்டது.
மாவட்டத்தின் நீதிமன்றம், ஆயுர்வேத வைத்தியசாலை ,பிரதேச செயலகம், மாவட்ட செயலகம் ,விமானப்படை, பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஆகிய துறைகளில் கடமையாற்றும் தமிழ்மொழி மூலமான உத்தியோகத்தர்களுக்கு இரண்டாம் மொழி சிங்கள கற்றைநெறி பயிற்சி வழங்கப்பட்டு பயிற்சியை நிறைவு செய்த உத்தியோகத்தர்களின் இறுதிநாள் கலாச்சார நிகழ்வுகள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் அதிதிகளாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் , உதவி மாவட்ட செயலாளர் ஜி.பிரணவன் , தேசிய மொழி பிரிவு மாகாண நிலைய உத்தியோகத்தர் சுபாஷினி ரகுவரதன்,மாவட்ட செயலக மொழிக்கல்வி இணைப்பாளர் பி.சந்திரகுமார் மற்றும் வளவாளர்களாக செல்வி திலினி மதுஷிகா , செல்வி தாரணியா மற்றும் நிகில்டா, ரோசான் ஆகியோர் கலந்துகொண்டனர். மாவட்டத்தில் அரச உத்தியோகத்தர்களின் ஆளுமை மற்றும் மொழி வாண்மையை மேம்படுத்துவதற்கும் அலுவலக கடமையில் ஈடுபடும் போது இரண்டாம் மொழி தொடர்பாடலை மேம்படுத்துவதற்காக இக்கற்கை நெறி அரச உத்தியோத்தர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







