
நல்லிணக்கத்தினை மேம்படுத்துவதற்கு பல்கலைக்கழகம் மற்றும் அரசின் ஈடுபாட்டை அணிதிரட்டுதல் நிகழ்வானது மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் புதிய மாவட்ட செயலகத்தில் 25.02.2025 அன்று இடம்பெற்றது. இலங்கை தேசிய சமாதானப் பேரவையினால் நல்லிணக்கத்தினை மேம்படுத்துவதற்கு பல்கலைக்கழகம் மற்றும் அரசின் ஈடுபாட்டை அணிதிரட்டுதல் எனும் கருப்பொருளை மையமாகக் கொண்டு இனரீதியான ஒருமைப்பாட்டை மேம்படுத்துவதற்கான செயற்திட்டமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
கிழக்கு பல்கலைக்கழகம், யாழ் பல்கலைக்கழகம், ருகுணு பல்கலைக்கழகம் மற்றும் சப்பிரகமுவ பல்கலைக்கழகம் ஆகியன இணைந்து நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பல்லினத்தன்மை மக்கள் வாழும் எமது நாட்டில் சமய ரீதியாக நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கு ஆய்வுகள் மற்றும் தரவுகள் மூலம் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும் மாவட்டத்தில் இனமுறுகல் ஏற்படும் பிரதேசங்களில் பல்கலைக்கழக மாணவர்கள் ஆய்வுகள் மேற்கொண்டு பிரச்சினைகளுக்கான ஆரம்ப புள்ளிகளை கண்டறிந்து ஆய்வுகளை சமர்ப்பித்துள்ளனர். இதன்போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் சமாதானம் சக வாழ்வை கட்டியெழுப்புவதற்கு இவ்வாறான ஆய்வுகள் ஆரோக்கியமான சமூகத்தை மேம்படுத்த முடியும் என்றார். இந்நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் ஜி. பிரணவன், கலாநிதி ரீ.ஜெயசிங்கம், கலாநிதி எஸ். உமாசங்கர்,பேராசிரியர். சுரேஷ் கணேஷ் மற்றும் உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.







