
மட்டக்களப்பு மாவட்டத்தில் நவீன முறையிலான விவசாய செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடலொன்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் புதிய மாவட்ட செயலக மண்டபத்தில் 21.03.2025 அன்று இடம்பெற்றது. மாவட்ட செயலகம் மற்றும் விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் கொமர்சல் வங்கியின் அனுசரனையில் மாவட்டத்தில் புதிய தொழில்நுட்பத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான ஆரம்ப கட்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.
அரச விவசாய கொள்கையில் புதிய நவீன முறையிலான விவசாய செய்கை மேற்கொண்டு சிறந்த விளைச்சலை பெற்றுக் கொள்வதற்கு நவீன தொழில்நுட்ப இயந்திரங்களின் பங்களிப்பு, இயந்திரத்தின் மூலம் நாற்றுகளை நடுதல், ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தல் (Drone), செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தல், பரிசூட் முறையில் நாற்றுக்களை நடுதல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக துறைசார்ந்த நிபுணர்களுடன் கலந்துரையாடப்பட்டது. இத்திட்டத்தின் ஆரம்ப கட்டமாக வவுணதீவு பிரதேசத்தில் நான்கு விவசாயிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் இருபது ஏக்கர் நெற்காணிகளில் முன்மாதிரியான விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
மேலும் இத்திட்டத்தினுடாக கிழக்கு பல்கலைக்கழகத்தினால் இருபது விவசாயம் மேற்கொள்ளும் இளைஞர்களுக்கு புதிய தொழில் நுட்பஅறிவு வழங்கப்படவுள்ளது. இதன்போது நவீன விவசாயத்தினால் மேற்கொள்ளப்பட்டு அறுவடை மேற்கொள்ளப்பட்ட விளைநிலங்களில் பெற்றுக் கொள்ளப்பட்ட விளைச்சல்கள் மற்றும் செலவுகள் தொடர்பான ஆய்வுகள் அளிக்கை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த், மட்டக்களப்பு மாவட்ட விவசாய பணிப்பாளர் எம். எப். ஏ. ஸனிர், மாவட்ட விவசாய திணைக்கள விரிவாக்க பிரிவு பிரதி பணிப்பாளர் எம்.பரமேஸ்வரன், விவசாய போதனா ஆசிரியர்கள், கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி ரி.கிரிதரன், துறைசார் நிபுணர்கள், கொமர்சல் வங்கி உயர் அதிகாரிகள், விவசாய அமைப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.







