
மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் விசேட இப்தார் நிகழ்வு காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 22.03.2025 அன்று நடைபெற்றது. அகில இலங்கை சமாதான நீதவானும் சிரேஸ்ட ஊடகவியலாளரும் மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைவருமாகிய "சாமஸ்ரீ தேசமான்ய" உ. உதயகாந்த் (JP) அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி.ஜஸ்டினா யுலேகா முரளிதரன் அவர்கள் கலந்து சிறப்பித்துள்ளார்.
இந்நிகழ்விற்கு ஆன்மீக அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட பல் சமய ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ வீ.கே.சிவபாலன் குருக்கள்,காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க்.எச்.எம்.எம்.இல்ஹாம் பலாஹி BA, அருட்தந்தை ஏ.யேசுதாஸ் அடிகளாரும் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்விற்கு விசேட அதிதிகளாக காத்தான்குடி பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் எம்.ரஹூப், மட்டக்களப்பு மாவட்ட ஊடகப் பிரிவின் பொறுப்பதிகாரி வடிவேல் ஜீவானந்தன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அளப்பரிய சேவையாற்றி வரும் மாவட்ட அரசாங்க அதிபருக்கு கௌரவமளிக்கும் வகையில் அவரது சேவையைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி, மலர் மாலை அணிவித்து, நினைவுச்சின்னம் வழங்கப்பட்டதுடன், சங்கத்தினால் ஏற்கனவே வெளியிடப்பட்ட "நீதியின் நிரல்" நூலின் பிரதியும் அரசாங்க அதிபருக்கு வழங்கி வைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் ஆரம்பகால உறுப்பினர்களாக செயற்பட்டு சங்கத்தின் வளர்ச்சிப் பாதைக்கு அளப்பரிய பங்காற்றியமைக்காக சங்கத்தின் முன்னால் மற்றும் தற்போதைய உறுப்பினர்களுக்கு பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான ஜஸ்டினா யுலேக்கா முரளிதரன் அவர்களால் பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது, ஆரம்ப காலத் தலைவர் யோசப் இராஜேந்திரன் தவராசா (JP), ஆரம்ப கால பொருளாளரும் முன்னாள் தலைவருமான அல்ஹாஜ் பாவலர் சாந்தி முஹியித்தீன் (JP), முன்னாள் உப தலைவரும் அமைப்பின் வளவாளருமான அ.அன்பழகன் குறூஸ் (JP), முன்னாள் உப தலைவர் கதிராமத்தம்பி ஜெயசுந்தரம் (JP), ஆரம்ப காலச் செயலாளர் பாலிப்போடி இன்பராசா (JP) , முன்னாள் உப செயலாளரும் தற்போதைய உப தலைவருமான அல்ஹாஜ் முகமது யூசுப் ஆதம் (JP), முன்னாள் செயலாளர் கந்தப்போடி தங்கராசா (JP) மற்றும் முன்னாள் பொருளாளரும் தற்போதைய பொருளாளருமான Dr.சபாரெத்தினம் சுதர்சன் (JP) ஆகியோருக்கு இதன்போது கௌரவமளிக்கப்பட்டது.
சங்கத்தின் ஆரம்ப கால மற்றும் தற்போதைய தலைவர்கள், உப தலைவர்கள், செயலாளர்கள், சங்கத்தின் கணக்காய்வாளர்கள் பொருளாளர் உள்ளிட்ட சங்கத்தின் நிருவாக சபை உறுப்பினர்கள் மற்றும் சங்கத்தின் பிரதேச இணைப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள், நலன் விரும்பிகள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்ததுடன், இந்நிகழ்வினை கவிஞர் ஜீ.எழில்வண்ணன் தொகுத்து வழங்கியதுடன், குறித்த நிகழ்விற்கு சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் இவ்வாண்டிற்கான இரண்டாவது நிர்வாக சபைக் கூட்டம் தலைவர் "சாமஸ்ரீ தேசமான்ய" உ. உதயகாந்த் (JP) தலைமையில் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.







