
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான முதலாம் காலாண்டிற்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுக்கூட்டமானது மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் பிரதம உள்ளக கணக்காய்வாளர் ஏ.எஸ்.சசிகரன் அவர்களின் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 18.06.2025 அன்று இடம்பெற்றது. இதன்போது மாவட்டத்திற்கான கணக்காய்வு ஐய வினாக்கள் மற்றும் ஒதுக்கீடுகள் மற்றும் செலவினங்கள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன் இக்காலாண்டிற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
மேலும் இவ்வருட முதலாம் காலாண்டில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளிலும் மேற்கொள்ளப்பட்ட செயற்றிட்டங்கள் மற்றும் நடைமுறைப்படுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பாக விரிவாக தெளிவூட்டப்பட்டது. இக்கூட்டத்தில் தேசிய கணக்காய்வு முகாமைத்துவ திணைக்களப்பணிப்பாளர் ரீ.பிரபாகரன் மற்றும் அமைச்சின் உள்ளக கணக்காய்வாளர் என். பொன்ராணி நிகழ்நிலை தொழில்நுட்பம் ஊடாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி சுதர்ஷினி ஶ்ரீகாந்த், திருமதி நவருபரஞ்சினி முகுந்தன் (காணி), சிரேஸ்ட உதவி கணக்காய்வாளர் நாயகம் எம்.எச்.எம். அரபாத் , மாவட்ட பிரதம கணக்காளர் திருமதி காயத்திரி ரமேஸ், பிரதேச செயலாளர்கள், கணக்காய்வு அத்தியட்சகர் ரொபட், கணக்காளர்கள், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகதார்கள், உள்ளககணக்காய்வு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.







