
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட சுற்றாடல் சட்ட அமுலாக்கல் குழு கூட்டமானது பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 24.06.2025 அன்று இடம்பெற்றது.
மட்டக்களப்பு மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் ரீ.சுந்தரேசன் அவர்களது பங்குபற்றலுடன் இடம்பெற்ற கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவரூபரஞ்ஜினி முகுந்தன் (காணி), மட்டக்களப்பு மாநகர சபையின் மேயர் சிவம் பாக்கியநாதன், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் வீ.நவநீதன், பிரதேச செயலாளர்கள், மாநகர சபை ஆணையாளர் என்.தனஞ்ஜெயன், உதவிப் பிரதேச செயலாளர்கள், துறைசார் திணைக்களங்களின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டு தமது கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை முன்வைத்திருந்தனர்.
இதன்போது மாவட்டத்தில் மிகவும் பாரிய பிரச்சனையாக திகழும் திண்ம கழிவகற்றலில் காணப்படும் சவால்கள் மற்றும் சாதக பாதக தன்மைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டதுடன், சட்டவிரோத மணல் அகழ்வு, யானை மனித மோதல் உள்ளிட்ட மாவட்டத்தில் நிலவும் மேலும் பல பிரச்சனைகள் தொடர்பாக இதன்போது விரிவாக ஆராயப்பட்டதுடன், பல பிரச்சனைகளுக்கான தீர்வுகள் எட்டப்பட்டதுடன், சில பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கான ஆலோசனைகள் மாவட்ட அரசாங்க அதிபரினால் வழங்கிவைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.







