
மட்டக்களப்பு மாவட்ட விவசாய குழு கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் ஒல்லாந்தர் கோட்டையில் அமைந்துள்ள பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 27.06.2025 அன்று இடம்பெற்றது. இக்கூட்டத்தில் நெல் அறுவடை காலப்பகுதி நெருங்கிவிட்டதனால் நெல் கொள்வனவு சபை நெற் கொள்வனவை ஆரம்பிக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் முன் வைத்ததுடன், சிறு மற்றும் பெரிய நீர்ப்பாசன குளங்களின் நீரினை பயன்படுத்தி விவசாயம் செய்யும் போது ஏற்படும் இடர்கள் தொடர்பாகவும், யானையினால் ஏற்படும் பயிர் சேதங்கள் மற்றும் யானை வேலி அமைக்க வேண்டியதன் அவசியம், காப்புறுதி கிடைக்காதமை , விவசாய வீதி அபிவிருத்தி போன்ற மேலும் பல விடயங்கள் இதன் போது விரிவாக ஆராயப்பட்டதுடன் மேலும் மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கிவரும் பல்வேறுபட்ட பிரச்சனைகளான வெள்ளத்தினால் உடைவடைந்த குளங்கள் மற்றும் கால்வாய்களை மீள்கட்டுமானம், போன்ற மேலும் பல விடயங்கள் தொடர்பாக இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் பல தீர்க்கமான முடிவுகள் எட்டப்பட்டது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி.சுதர்ஷினி ஸ்ரீகாந்த், நவரூபரஞ்ஜினி முகுந்தன் (காணி), மத்திய நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள், மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ஜெகன்நாத், தேசிய உரச் செயலகத்தின் மாவட்ட பிரதிப்பணிப்பாளர், மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், துறைசார் அதிகாரிகள், விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் பண்ணையாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.







