
மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்பிள்ளை பருவ அபிவிருத்தி வாரத்தினை முன்னிட்டு விசேட கலந்துரையாடல், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில், உதவி மாவட்ட செயலாளர் ஜீ. பிரணவன் மேற்பார்வையின் கீழ் புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 17.07.2025 அன்று நடைபெற்றது. நாடளாவிய ரீதியில் 'சிறுவர் நாம் உலகை வெல்வதற்கு – விளையாட்டுக்கும் இடமளியுங்கள்' எனும் தொனிப்பொருளின் கீழ் முன்பிள்ளை பருவ அபிவிருத்தி வார நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் குறித்து மாவட்ட முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி இணைப்பாளர் வீ. முரளிதரன் வழங்கிய விளக்கங்கள் மூலம் தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டன. மேலும்இ கிராமிய முன்பிள்ளை பருவ அபிவிருத்தி குழுக்களை விழிப்புணர்வூட்டி வலுப்படுத்துவதற்கான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் இதன் போது தெளிவுபடுத்தப்பட்டன.
முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தியில் சிறார்களின் சுகாதாரத்தை மையப்படுத்தி, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர். முரளீஸ்வரன் சிறார்களின் சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் அவற்றின் விளைவுகள் குறித்து விளக்கமளித்தார். இவ்வேளையில் கருத்துரைத்த அரசாங்க அதிபர், முன்பிள்ளை சிறார்களின் கற்றல் செயற்பாடுகள் மிக முக்கியமானவை என்றும் அவர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்ய அதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் முன்பள்ளி உதவி கல்விப் பணிப்பாளர்கள், மாவட்ட செயலக சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு அதிகாரிகள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனம் சார்ந்த அதிகாரிகள், முன்பள்ளி ஆசிரியர்கள், முன்பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பாலர் கல்வி பணியகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





