
மட்டக்களப்பு - கிழக்கு பல்கலைக்கழக தொழில்நுட்ப பூங்கா நிலையத்திற்கு விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன விஜயம் ஒன்றினை மேற்கொண்டதுடன், பல்கலைக்கழக நிர்வாகத்தினருடனும் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டார். கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன், கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், அமைச்சின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
குறித்த கலந்துரையாடலில் — தொழில்நுட்ப வளத்தை பயன்படுத்தி பல்வேறு செயற்திட்டங்களை ஆரம்பித்தல், அதனை பிரபலப்படுத்தல், விரிவுபடுத்தல், அரச திணைக்களங்களுடன் இணைந்து செயற்படுதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. மேலும், குறித்த கலந்துரையாடலின் பின்னர் கிழக்கு பல்கலைக்கழக தொழில்நுட்ப பூங்கா கட்டிடத் தொகுதியில் இடம்பெறும் தொழில்நுட்ப கூடச் செயற்பாடுகள் தொடர்பிலும் அமைச்சர் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.






