
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்றுமதி திறன் கொண்ட சிறு தொழில் முயற்சியாளர்களைத் தேர்ந்தெடுத்தல் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வானது, மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில், புதிய மாவட்ட செயலக மண்டபத்தில் 21.07.2025 அன்று இடம் பெற்றது. இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி அதிகாரசபை, எமது நாட்டிற்கு அந்நியச் செலாவணியை பெற்றுக் கொள்வதற்காக ஏற்றுமதியாளர்களை வலுவூட்டும் செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.
இதனை முன்னிட்டு உதவி மாவட்ட செயலாளர் ஜி. பிரணவன் ஏற்பாட்டில் இடம் பெற்ற நிகழ்வில், மாவட்டத்தில் ஏற்றுமதி செய்யக் கூடிய சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோரை எவ்வாறு தேர்ந்தெடுப்பது தொடர்பான தெளிவூட்டல்கள் இந்நிகழ்வில் வழங்கப்பட்டன. இந்நிகழ்வின் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர், 'மாவட்டத்தில் இளைஞர் யுவதிகளை ஏற்றுமதி உற்பத்தியாளர்களாக உருவாக்க வேண்டியது எமது கடமை. பிரதேச மட்டத்திலிருந்து அவர்களை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்க வேண்டும்' என்றார்.
இந்நிகழ்வில் ஏற்றுமதி அபிவிருத்தி அதிகாரசபை பிரதிப் பணிப்பாளர் பி.எம்.எம். சமீம், மட்டக்களப்பு மாவட்ட ஏற்றுமதி அபிவிருத்தி அதிகாரசபை பின் அபிவிருத்தி உத்தியோகத்தர் அ. பிரபு, ஏற்றுமதி அபிவிருத்தி அதிகாரசபை, தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகாரசபை, சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி சபை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






