
பால்நிலை அடிப்படையிலான வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை வைத்து பராமரிக்கும் தற்காலிக பெண்கள் பாதுகாப்பு இல்லம் தொழிற்பாடு சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில், உதவி மாவட்ட செயலாளர் ஜீ. பிரணவன் மேற்பார்வையின் கீழ், மாவட்ட மகளீர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி எஸ். அருணாளினி ஒழுங்குபடுத்தலில், பழைய மாவட்ட செயலகத்தில் 22.07.2025 அன்று இடம் பெற்றது.
பெண்கள் பணியகம், இலங்கை மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்கள் அமைச்சின் தலைமைத்துவம் மற்றும் வழிகாட்டுதலின் கீழ், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் மற்றும் ஓபர் சிலோன் (OFERR Ceylon) நிறுவனத்தின் அனுசரணையில் இந்நிகழ்வு இடம் பெற்றது.
'நீதி வரையறுக்கட்டது - இலங்கையில் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை உறுதி செய்தல்' எனும் தொனிப்பொருளில் கலந்துரையாடல் இடம் பெற்றது. இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர், பாதிக்கப்பட்டவர்களை உரிய முறையில் பராமரித்து பாதுகாப்பதுடன் அவர்களை உளவியல் ரீதியாக அணுக வேண்டும் என்றார்.
இதன் போது, பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான விசேட ஆலோசனை வழங்குதல், பெண்கள் தங்குமிடங்களை நிர்வகிப்பதற்கான வழிகாட்டுதல்கள், தங்குமிடம் பணியாளர்கள் பின்பற்ற வேண்டிய விழுமியங்கள் மற்றும் நெறிமுறைகள் போன்ற பல விடயங்கள் தொடர்பாக துறைசார் உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடப்பட்டதுடன், ஒபர் நிறுவன வளவாளர் திருமதி இந்திரானி ராஜேந்திரன் இதன் போது விளக்கவுரை மேற்கொண்டார்.
இந்நிகழ்வில் மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் திருமதி சுபா சதாகரன், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் தொழில்நுட்ப இணைப்பாளர் திருமதி சூஸ்மிதா தயாநந்தன், ஓபர் சிலோன் நிறுவன இணைப்பாளர் திருமதி கிருசாநந்தி, துறைசார் நிபுணர்கள், வைத்தியர்கள், பொலிஸ் அதிகாரிகள், கல்வி திணைக்கள உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்






