மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் கடமைகளில் பணியாற்றவுள்ள சிரேஸ்ட தலைமைதாங்கும் உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி வகுப்புக்கள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் உதவித்தேர்தல் ஆணையாளர் திரு.ஆர்.சசீலன் தலைமையில் கடந்த 29.10.2019 காலை நடைபெற்றது. பயிற்சி வகுப்பானது ஆரம்ப கட்டமாக சிரேஸ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தர்களுக்கு இரண்டு கட்டமாக நடைபெற்றது.
காலையில் ஒரு தொகுதியினருக்கும் மாலையில் அடுத்த தொகுதியினருக்கும் நடைபெற்றது. தேர்தல் காலங்களில் உத்தியோகத்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சட்ட திட்டங்கள், வாக்காளருக்கு எவ்வாறான முறையில் உதவுவது தொடர்பான விளக்கங்கள் அளிக்கப்பட்டதுடன் அனைத்து உத்தியோகத்தர்களும் வாக்காளர்களுக்கும் போதுமான உதவிகளை செய்ய வேண்டும் எனவும் சரியான நேரங்களுக்கு வாக்கெடுப்பு நிலையங்கள் திறக்கப்பட வேண்டும், அங்கு உரியகடமைப் பொறுப்புக்களை சரியான முறையில் பங்கெடுக்க வேண்டும் எனவும் வேண்டப்பட்டது.
தேர்தல் திணைக்களத்தின் சட்ட திட்டங்களை குறிப்பாகவும் கடுமையாகவும், கண்டிப்பாகவும் கடைப்பிடிக்கப்படுதல் வேண்டுமெனவும், சகல உத்தியோகத்தர்களை கண்காணிப்பதற்கென சிரேஸ்ட தலைமைதாங்கும் உத்தியோகத்தர்கள் இருப்பதுடன் அவர்களின் கடமைகளை கண்காணிப்பதற்கு உதவி தெரிவத்தாட்சி உத்தியோகத்தர்கள் என பலரது கண்காணிப்புடன் பணியாற்றல் வேண்டுமெனவும், தெரிவத்தாட்சி உத்தியோகத்தர் திரு.மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார். மேலும் அவர் குறிப்பிடுகையில் நேர்மையானதும், நீதியானதுமான தேர்தலை நடத்திமுடிப்பதற்கு சகல உத்தியோகத்தர்களும் பங்களிப்பு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.













