மட்டக்களப்பு மாவட்ட அரச திணைக்கள உத்தியோகத்தர்களின் வாக்களிப்பு 01.11.2019 பிற்பகல் 4.15 மணியுடன் முடிவடைந்து. அஞ்சல் வாக்களிப்பு நடைபெறும் போது எவ்விதமான அசம்பாவிதங்களும் இரண்டு தினங்களிலும் பதிவாகவில்லை என மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் மாவட்ட ஊடகப்பிரிவிற்கு தெரிவித்தார்.
அஞ்சல் மூல வாக்காளர்களின் வாக்குகள் பொறியிடப்பட்ட தபால் உறையில் இடப்பட்டு அஞ்சலகங்களில் கையளிக்கப்பட்டவை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகத்தில் பொறுப்பளிக்கப்பட்டது. தெரிவத்தாட்சி அலுவலகத்திற்கு பொறுப்பளிக்கப்பட்ட பொறியிடப்பட்ட அஞ்சல் பொதிகள் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு அனுப்புவதற்கு ஏதுவாக வாக்குப் பெட்டிகளில் இடும் பணிகளும் நடைபெற்றது.
அரச திணைக்கள உத்தியோகத்தர்களின் வாக்குகள் கணிசமான அளவு அளிக்கப்பட்டதாக தெரிவத்தாட்சி அலுவலரும், மாவட்ட அரசாங்க அதிபருமான திரு.மா.உதயகுமார் அவர்கள் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் குறித்த இரு தினங்களிலும் வாக்களிக்க தவறிய அரச திணைக்களங்களின் பணிபுரியும் உத்தியோகத்தர்கள் நவம்பர் 07 ஆந் திகதி உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் வாக்களிக்க இறுதி சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.










