மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற கடும்மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக விவசாய நிலங்கள் வெள்ளத்தினால் முழ்கி அழிவடையும் அபாயம் இருப்பதால் முகத்துவாரத்தினை வெட்டி கடலுக்குள் வெள்ள நீரினை ஓடவிடும்படி விவசாயிகள் தொடர்ந்து முறையிட்டு வந்தனர்.
இதனைத்தொடர்ந்து மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களினால் கடந்த 01.11.2019 அன்று மாலை 4.30 மணிக்கு அவசர கலந்துரையாடல் ஒன்று சம்மந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து இடம் பெற்றது.
நீர்பாசன திணைக்களம், வீதி அபிவிருத்தி அதிகாரசபை, கடலோர பாதுகாப்பு சபை, காலநிலை அவதான நிலையம், பிரதேச செயலாளர்கள், விவசாய திணைக்களம், கமநல சேவைகள் திணைக்களம், மீன்பிடித் திணைக்களம், மாவட்ட செயலகத்தின் உயர் அதிகாரிகள், அனர்த்த முகாமை நிலையம், விவசாய காப்புறுதி சபை நிலையம் ஆகிய திணைக்கங்கள் இணைந்து நடத்தப்பட்ட இக்கலந்துரையாடலில் எருமைத்தீவு, படையான்வெளி, பெரியகளம், சத்துருக்கொண்டான், கரடியனாறு, பண்டாரியாவெளி, சேத்துக்குடா ஆகிய பிரதேசங்களில் மொத்தம் 1,890 ஏக்கர் விவசாய வயல் நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அறியப்பட்டது.
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு குறைவான மழைவிழ்ச்சி கிடைக்கப்பெற்றுள்ளது. ஆண்டுக்கு 1,650 மில்லிமீற்றர் கிடைக்கப்பட வேண்டும் ஆனால் தற்போது 1,124.3 மில்லிமீற்றர் மழைவிழ்ச்சி தான் கிடைக்கப்பெற்றுள்ளது. மக்களுக்கான போக்குவரத்துக்கள் மற்றும் சுகாதார பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து விவசாயிகள், மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் மற்றும் எதிர்வருகின்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பணிகளுக்கு இடையூறுகள் ஏற்படா வண்ணம் விரைவில் சுமுகமான தீர்வு எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அரசாங்க அதிபரின் அறிவுரைக்கமைய அனைத்து திணைக்கள அதிகாரிகளும் ஆலோசனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.












