சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான அறிவுறுத்தல் பயிற்சிக் கருத்தரங்கு 04.11.2019 காலை 10 மணியளவில் தெரிவத்தாட்சி அலுவலர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தம் 428 சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கு தங்களுடைய கடமைகளை மிகவும் அவதானமாகவும் கவனத்துடனும் செயற்படவேண்டும் என்றும், ஜனாதிபதி தேர்தல் சட்டம் 1981ம் ஆண்டு 15ம் இலக்க சட்டத்தின் பிரகாரம் சகல தேர்தல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என உதவி தெரிவத்தாட்சி அலுவலர் ஆர்.சசிலன் தெரிவித்தார்.
மேலும் தெரிவத்தாட்சி அலுவலர் குறிப்பிடுகையில் 428 சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கு மிகவும் பொறுப்பு வாய்ந்த கடமையினை அரசாங்கம் கையளிக்கவுள்ளது. ஆகையினாலே வாக்கெடுப்பு நிலையங்களில் சுமுகமான முறையில் வாக்களிப்பிற்கு பங்களிப்பு செய்வதுடன், வாக்களிப்பு நிலையத்தில் இருந்து 500M வரையுள்ள சுற்று வட்டத்திற்குள் ஏற்படுகின்ற பிரச்சனைகளை கூட சிரேஷ்ட தலைமை தாங்கும் அதிகாரிகள் கவனம் செலுத்தி வாக்காளருக்கு இடையுறு ஏற்படாவிடத்து வாக்களிப்பினை உரிய நேர காலத்திற்கு நடாத்தப்படுவது மிக மிக அவசியம் என்பதனை வலியுறுத்தினார்.











